கீழப்பெரும்பள்ளம் (கேது)- நாகநாதர் திருக்கோயில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழிலிருந்து 21.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறைலிருந்து பேருந்து வசதிகள் அதிகம் இல்லை, எனவே கார் மற்றும் ஆட்டோ மூலம் செல்லலாம்.
மூலவர்:நாகநாதர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: சவுந்தர்யநாயகி
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: நாகதீர்த்தம்
இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம். நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம். கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
தல அமைவிடம : கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம் ஒரு சுற்றையும், ஒரு கோபுரத்தையும் கொண்டு விளங்குகிறது. பிரகாரத்தின் மேற்கு மூலையில் விநாயகர் சந்நதியும், பிரகார நடுப் பகுதியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரும் உள்ளனர். அடுத்து, துர்க்கையும், லக்ஷ்மி சமேத நாரயணரும் அமைந்துள்ளனர். அதன் பின்னர் கஜ லஷ்மியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிரகரத்தில் கேது பகவானும், சனி பகவானும் தனி சந்நதி கொண்டுள்ளனர். பைரவர், சூரியன், ஞானசம்பந்தர் சந்நதிகளும் உண்டு. கருவறையில் நாகநாத சுவாமியும், வலப் புறம் தெற்கு நோக்கி சௌந்தர நாயகியும் வீற்றிருக்கின்றனர். நடராஜர்,பஞ்ச மூர்த்திகள்,உற்சவ மூர்த்திகளும் உள்ளனர்.
தல வரலாறு:தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக மூங்கில் காட்டில் தவமிருந்தது.
வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, "நாகநாதர்' என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.
தலபெருமை: இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம்.
இரட்டை சூரியன்: கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம், சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு