கடையநல்லூர், கடகாலீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளது.
இறைவன் : கடகாலீஸ்வரர்
இறைவி : கரும்பால்மொழி அம்மை
கோவில் அமைப்பு : மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நடராஜர் சன்னதிக்கு கீழே பாதாள சுரங்கம் உள்ளது. இக்கோயிலில் கடகாலீஸ்வரர், கரும்பான் மொழி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், அருள்மிக தட்சிணாமூர்த்தி, ஆறுமுக நயினார், துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
தல வரலாறு : தென் பொதிகை தென்றல் வீசும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த அழகே உருவான ஊர் கடையநல்லூர். கருப்பாநதி பாயும் கடையநல்லூருக்கு பல சிறப்புகள் உண்டு. கரும்புசாறு போல் இனிப்பாக இருக்கும் நீர்வளம் உடையதால் கருப்பாநதி எனப்பெயர் பெற்றது. அகத்திய மாமுனி தென்னாடு விஜயம் மேற்கொண்டபோது ஒருமுறை கடையநல்லூருக்கு வந்தார். அப்போது இடையர்கள் பால் கொடுத்து உபசரித்தனர். அந்த பாலை மூங்கில் கடகாலில் ஊற்றி கொடுத்துவிட்டு தாங்கள் மாடு மேய்க்க சென்றுவிட்டனர்.
இவர் அந்த கடகாலையே கவிழ்த்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வழிபாடு முடிந்து அகத்தியர் சென்றுவிட்டார். மாலையில் இடையர்கள் இந்த கடகாலை நிமிர்த்தியபோது அதை நிமிர்த்த முடியவில்லை. முடியாததால் அதை கோடாரி கொண்டு வெட்டினர். அப்போது கடாகாலையில் கோரை ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை பார்த்து பயந்து போய் இடையர்கள் மன்னர் வல்லப பாண்டியனிடம் போய் முறையிட்டனர். பார்வை குறைபாடுடைய அம்மன்னர் வந்து அந்த கடகாலை தம் இரு கரங்களால் தடவி பார்த்து கண்களில் ஒற்றிக் கொள்ளவும் கண் பார்வை கிடைத்தது. இதனால் மனமகிழ்ந்து, கண் கொடுத்த கமலேசா என வாயார புகழ்ந்து இந்த கடகாலீஸ்வரர் கோவிலை கட்டினார்.
கண் கொடுத்த கமலேஸ்வரா என போற்றி சிவாலயம் அமைத்து கொடுத்துள்ளார். இச்சிவாலய தேவனின் பெயராலே கடகால்நல்லூர் என்ற பெயருடன் இந்த நகர் உருவாகி பின்னர் கடையநல்லூர் என மருவியது. அந்த காலத்தில் சிவாலய பராமரிப்புக்கென்று அந்தணர்களை இந்த பகுதியில் குடியமர்த்தினார் அரசர். இந்த கிருஷ்ணர் கோவில் சந்நதி தெருவில் அந்தணர்கள் குடியேறினர். பொதுவாக அக்ரஹாரத்தின் மேற்கே விஷ்ணுவும், வடகிழக்கில் சிவாலயமும் இருப்பதுதான் ஐதீகம். இங்கே மாற்றாக சிவனுக்கு வடமேற்கில் கிருஷ்ணன் இருப்பதால் சிவனுக்கு கன்னிமூலையில் கணபதிக்கு தெற்கில் ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் அமைத்து கொடுத்தார் வல்லபபாண்டியர்.
இவ்வளவு பழம்பெருமை வாய்ந்த இந்த கிருஷ்ணருக்கும், கிராம தேவதையான கருமாஷி கருவை காக்கும் தேவி அம்மனுக்கும் திருப்பணி செய்ய மகான்கள், பெரியோர்கள் ஆசியுடன் ஏற்பாடு செய்து வருகின்றனர் அந்த பகுதி ஆஸ்தீக ஆன்மிக மெய்யன்பர்கள். இத்திருக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்தி தர சென்னை பரத்வாஜ் சுவாமிகள் உத்தேசித்துள்ளார்.ஒவ்வொரு மாத திருவோண நட்சத்திரத்தன்றும் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பாயாசம் நைவேத்யம் செய்து தம்பதிகளுக்கு வழங்கப்படும். இங்கு வந்து பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் அடையப்பெற்றோர் எண்ணற்றவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடகாலில் தோன்றியதால் கடகாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அதுவரை வில்வபுரி என்றும் திருமலைகொழுந்துபுரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், கடகால் நல்லூர் என்றும் நாளடைவில் கடையநல்லூர் என மருவியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இந்த பகுதியில் இடையர்கள் மிகுதியாக வசித்து வந்தமையால் கிருஷ்ணர் வழிபாடு மற்றும் அவரது சகோதரியான சக்தி வழிபாடும் உருவானது. இத்தல கிருஷ்ணன் நவநீதகிருஷ்ணன் என்ற நாமத்துடன் வழிபடப்படுகிறார். இதையடுத்து கோவில் பூஜைக்காக குடியமர்த்தப்பட்ட அந்தணர்கள், கிருஷ்ணரையும், சக்தி வடிவான கருமாஷி அம்மாளையும் வழிபட தொடங்கினர். இத்தல அம்மனுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. கருவை காப்பவள், மாட்சிமைப்படுத்துபவள் என பொருள். இந்த பகுதி பெண்கள் கர்ப்பமுற்றால் இந்த தாயிடம் வேண்டி கொள்வார்கள்.
தாயும் சேயும் நல்லபடியாக பிறந்தால் மஞ்சளை சாற்றி வழிபடுவதாக வேண்டிக்கொள்வார்கள். நல்லபடியாக பிரசவம் ஆகும். பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவர். இதுபோல் மாடு கன்று போட்டாலும் அம்மனுக்கு மஞ்சனை சார்த்தி நன்றி செலுத்தும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி பூஜை, பவுர்ணமி பூஜை, சங்கடஹர சதூர்த்தி பூஜைகள் ஆகியவையும் மாசி மாத பவுர்ணமி பூஜை காலையில் ஹோமங்கள், அபிஷேகங்கள் ஆராதனைகளும் மாலையில் திரிசதி அர்ச்சனை பாராயணங்களும் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. இதுதவிர செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் விமரிசையாக நடந்து வருகின்றன. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, கடையநல்லூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை